May 26, 2012

வாழ்ந்துவிட்டுப்போகிறேன்....


வாழ்ந்துவிட்டுப்போகிறேன்....
------------------------------​--------

வெறுமனே நான்
வாழ்ந்துவிட்டுப்போகிறேன்
விடுங்கள் என்னை – யாரும்
கேட்பாரற்ற என் கோட்பாடுகளில்
குறை காணவில்லை நான்.......

கல்லுக்குள் ஈரம் என்பீர்
உங்கள் நெஞ்சுக்குள்
ஈரமில்லாமல் – விடுங்கள்
என்னை வெறுமனே
வாழ்ந்துவிட்டுப்போகிறேன்....

என் அறுந்த கைக்கு
உப்புமில்லை - உங்களில்
எனக்காய் ஒரு ஆறுதல்
வார்த்தையுமில்லை
விடுங்கள் நான் வெறுமனே
வாழ்ந்துவிட்டுப்போகிறேன்.....

மேடை முழங்க வீராவேசம்
பிறகு மேடை இறங்கினால்
எமை மூடர்களாக்கும்
வெறும் வேஷம் - கொஞ்சம்
விடுங்கள் என்னை நான்
வெறுமனே வாழ்ந்துவிட்டுப்போகிறேன்....

ஒற்றுமை வேண்டுமென்பர்
தினம் ஓராயிரம் அணிகளாய்
வேற்றுமையும் காண்பர் – வேண்டாம்
எனக்கிவர்கள் ஆயினும் இவர்கள்
கண்கள் படாமல் வெறுமனே
கொஞ்சம் வாழ்ந்துவிட்டுப்போகிறேன்......

விலைபேசப்படுகிறது ஏழையின்
கல்வியும் கருவறையும் - சிறிதும்
உணற்சிகளற்றுப்போயிருக்கிறது
மானிட சமூகம் இதில்
மானம் இழப்பதைவிட கொஞ்சம்
தூரமாய் வெறுமனே நான்
வாழ்ந்துவிட்டுப்போகிறேன்...

மலர்களாய் பெய்திறங்கும்
சாரலுண்டு என்னோடு – சில்லென
புற்களை பொதிந்து நிற்கும்
பனித்துளிகளும் என்னோடு...

வேகமாய் விண் தொடும்
மேகமாய் நான் கொஞ்சம்
நிம்மதியாய் வாழ்ந்துவிட்டுப்போகிறேன்....

அன்புடன்

அபூ ஃபஹத்

May 5, 2012


ஆங்கோர் ஏழைக்கு

எழுத்தறிவிக்க அங்கொன்றும்

இங்கொன்றுமாய்

நேற்றைய கல்விச்சாலைகள்...


மண் தரையில் அகரம்

என் தமிழ் தாயின் முதல் வரம்

புல் தரையில் ஆகாரம்

பெற்ற தாயின் ஆனந்தம்...


காற்றுவெளிகளில் கலந்துபோன

ஆத்திச்சூடிகள் - கரும்பலகையில்

எழுதி முடிக்கப்பட்ட எண் கணக்குகள்..


வான் முட்டும் சத்தத்தில்

வாய்ப்பாட்டு ராகங்கள் -

மூலைகளில் சில

அடைத்து கண்ணாமூச்சிகள்

எங்கோ என ஏழைகள்

ஏங்கிப்போகும் உயரத்தில்

கல்வியும் கல்விச்சாவடிகளும் இன்று....


ஏழையின் சிரிப்பில்

இறைவனைக்காண்போம்

என அன்று - ஏழை கண்டு

இன் சிரித்திகழ்ந்து இறைவனை

மறந்திடும் இன்னாதார் இன்று...


தீ மிதித்து மண்சோறு தின்று

தன் மகனை பயிலவைத்து

சான்றோன் என கேட்ட தாய் அன்று...


தன் மகனுக்கு இதுதான்

தாய் என்று சான்று சொல்ல

சில பல தாய்களுடன் அனாதையாய்

விடுதிகளில் இன்று....


ஒருவன் ஆய்ந்தறிந்தான்

மற்றொருவனை ஆய்ந்தறியவைத்தாள்

இன்னுமொருவனை

சொல்லித்தெரியவைத்தாள்

எனினும் இன்றிவர் யாரும்

தெரியாதவளாய் தாய்....