Oct 31, 2010

தே டு கி றே ன்....

பரந்து கிடக்கிறது பூமி
என் பகுதியை தேடிப்பாற்கிறேன்
ஆதாரங்களின்றி....


அலைகளும் மழைகளும்
அடிக்கடி வந்து போகின்றன
தற்காலிகமாய் வாழ்ந்து போகின்றன...


கூர்ந்து கவனிக்கிறேன்
மழைத்துளிகள் பூமியை
துளைத்துச்சென்றபோதும்
மரித்த உயிர்கள் உயிர்த்ததாய்
நான் காணவில்லை....


விருட்சங்களிலிருந்து
உதிர்ந்து போன விதைகள்தான்
விண்ணை நோக்கி
அறை கூவியதோ நான்
கேட்கவில்லை...


பூக்களும் ஈக்களும்
உறவுகளை முறித்துக்கெள்ளவே
இல்லை – சிலபல
காரணங்கள் இல்லாததால்
தேனையும் அருந்தி
மகரந்தத்தையும் மாறி மாறி
பரிமாறிக்கெண்டே போகின்றன....


நான் மறந்துபோன பல முகங்களில்
உனது முகம் இல்லை – உன்
நினைவிலிருக்கும் முகங்களில்
என் முகம் இருக்குமோ
தெரியவில்லை...
முகங்களா முக்கியம்
நினைவுகளும் உணர்வுகளும்தானே....


சில பாதைகளினூடே
நடந்து செல்கையில் உன்
கொலுசணிந்த பாதச்சுவடுகள்
நிஜமாகவே நிழலாய் தெரிகிறது
சின்னச்சில கொலுசொலி 
சிணுங்கல்களும் என் காதுகளில்.....


பேருந்து நிறுத்தங்களை
சமீபிக்கும்போதெல்லாம்
சில பெண்கள் புத்தகங்களை
நெஞ்சோடணைத்து நிற்கிறார்கள்
அவை உனது போல் சிவப்பு
அட்டைகளால் பொதியப்பட்டவையல்ல 


ஆனாலும்
அந்த பேருந்து நிருத்தங்களில்
உனது சந்தன வாசம்
இருப்பதாய் உணர்கிறேன்...


எனது வீட்டுக் கூரைகளில்
காகங்கள் சத்தமாய் அழைக்கும்போதும்
என் வீட்டு தெருக்கதவின்
இரைச்சல் சப்தம் கேட்கும்போதும்
நான் எதிர்நோக்குவது
உன்னையல்ல என்றாலும்
நீயோ எனும் ஏக்கம்....


தொழில் நுட்பத்தின் உச்சம் மீண்டும்
வானொலியில் பிறந்திருக்கிறது
மறு ஜென்மம் – வானொலியில்
எப்போதாவது வழங்கப்படும்
உனக்குப்பிடித்த பாடல் எனக்கு
மீண்டும் காதலை வரவைக்கிறது.....


என் அம்மாவின் சேலைத்தலைப்பில்
முகம் துடைத்துவிட்டு போகும்போது
அம்மா சொல்வாள்
எப்போதும் சின்னப்பிள்ளையா என்று...


காலம் கடந்து போன
எனது ஞாபகங்களுக்கு முக்கியத்துவம்
இல்லைதான் எனினும்
மரணம் உனை ஆட்கொள்ளும் முன்
ஒரு முறையேனும் எனது
ஞாபகங்கள் உன்னில் முக்கியமாகும்....


வெறும் மனதோடு திரிவதாய்
தோன்றும் பல நேரங்களில்
காற்றில்லா வெற்றிடங்கள்
இப்படித்தான் இருக்கும் என உணர்கிறேன்
எதுவென்று தெரியாத
ஏதோ ஒன்று தொலைந்ததுபோல்....


ஒரு மயானத்தில் நான்
எனது ஞாபகங்களை மறந்து செல்வேன்
அது உனதும் உனக்கு மட்டும்
சொந்தமென்பதால்...
பரந்து விரிந்து கிடக்கும்
இந்த பூமியில் அதுவே
எனது பகுதி......




அபூ ஃபகத்...

Oct 14, 2010

சேல்ஸ் மேன்.....

சேல்ஸ் மேன்.......


இடது கையில் எண்ணை
உறிஞ்சும் பேப்பரால் சுற்றப்பட்ட
சாண்ட்விட்ச் - வலது கையில்
ஸ்டீயரிங்,
இடை இடையே கியரும்
மாற்றவேண்டும்...


சீறிப்பாயும் அறபிகளின்
வண்டிகளுக்கிடையில் கவனமும்
சிதறக்கூடாது - பகுதி தின்றுவிட்ட
சான்ட்விட்சின் பேப்பரும்
அகற்றவேண்டும்,


நொடி இடையில்
முதல் ரோட்டிலிருந்து மூன்றாம்
ரோட்டிற்கு தாவும் வாகனங்களை
சரியாக கவனித்து ஓட்டவும் வேண்டும்.


ஏனெனில் பின்னிலிருந்து
இடித்தாலும் முன்னிலிருந்து
இடித்தாலும் இருவரும் அறிவர்
காத்திருப்பின் அவஸ்த்தையை...


சில நேரங்களில் மற்றவன்
உயிரின் ஊசலாட்டமும்
அது போகும் வலியும்
நம் கண்களில் பதியும்...


இப்படித்தான் அரபு நாட்டின்
சாலைகளும் மனிதன் சார்ந்த
வாழ்க்கையும் - ஒரு
பொறுப்பில்லாத உலகம்....


ஒரு அரபிக்கு
அன்றைய தினம்தான் அவனின்
லட்சியம் - ஒவ்வொரு
இந்தியனுக்கும் அன்றைய தினம்
லட்சியப்பாதையின் சில மணித்துளிகள்...


அலறித்துடிக்கும் மொபைல் போணில்
அவனின் மேலாளர் அசுரனாய் - தன்
தந்தைக்கே பயப்படாதவன் பணிவாய்
சொல்லும் "சாரி"கள் சில நொடிகளில்
கண்க்கிலடங்கா...


வைத்த கை மாறாமல்
அடுத்த அழைப்பு
வங்காள விரிகுடாவை அடக்கி
அரபிக்கடலையும் தாண்டி
அவன் செல்போணில் செல்லமாய்
சிணுங்குகிறாள் மனைவி,


 எகிறித்துடிக்கிறான் 
தன் ஆசை மனைவி என்றும் பாராமல்
சனியனே உனக்கு
நேரம் காலம் தெரியாதா என்று....


தன் அலுவலுக்கு முன் அன்பு
அடங்கிப்போகிறது - மீண்டும்
துளிர் விடுவதோ ஆறு மணிக்கு மேல்
சத்தமில்லாத முத்தங்களாய்,
அப்போதுதான் அலுவல்கள்
அழகான அன்பாய் பரிணமிக்கிறது....


காற்றைக கிழிக்கும் வேகமும்
இடுப்பொடியும் பாரமும்
மறந்து போகிறான் தன் அன்பு மகனின்
அப்பா எனும் தொலை தூர
மழலை அழைப்பில்....


கடிதங்களை காத்திருக்க மனம்
பொறுப்பதில்லை- அதனால்த்தான்
தன் வியர்வைத் துளிகளை
தொலைபேசிக் கட்டணங்களாய்
கரைக்கிறான் வெள்ளிக்கிழமைகளில்.....


தான் படித்தபோது டிகிரிக்கு
கொடுத்த கல்விக்கட்டணத்தைவிட
பத்து மடங்கு பெரிதென்றாலும் தன்
பிள்ளைக்காய் எல்.கே.ஜி.
நுழைவுத்தேர்வும் எழுதுகிறான்
பெருமையாய்.....


தான் வாங்காவிட்டாலும் 
தகுதிக்கு மீறி கொடுக்கிறான்
வரதட்சினை
தகுதியே இல்லாத மாப்பிள்ளையானாலும்
தன் தங்கைக்காய்...


இப்படியாய் வருடங்களின்
துவக்கமும் இறுதியும் பார்த்து
முதுமையை அடைகிறான்
நிம்மதியையும் தன்னையும் மறந்து...


ஒரு பொழுதில், ஒரு கணம்
நீ எனும் நீ எதையோ தொலைத்து
தேடுவதாய் உணர்வாய் - அன்று
நீ எனும் நீ உலகத்திற்கு காலாவதியாகிறாய்....




பிரியமுடன்

அபூ ஃபஹத் 

Oct 13, 2010

நான் பயணப்படுகையில்....

நிலவே.......



இரவுகளினூடே பயணப்படுகிறேன்
அது ஓர்
ஒருவழிப்பாதை ; ஓரு
ஒற்றையடிப் பாதையும்கூட !


இரு விழிகளை நம்பி
ஒரு வழியில் என் பயணம்
நீ மூன்றாவது விழியாய்
என் பின்னால் !


அலட்சியமான ஓர்
லட்சியமற்ற பயணம்,
பயணத்தினூடே நான்
காண்பதெல்லாம் எனக்கு
பாடமாகுமோ..


என்னைச்சுற்றி ஏதேதோ
நடந்தபோதும் நான்
அறிந்தும் அறியாமலுமாய்-ஆனால்
நீ முழுவதும் ரசித்தவாறே
பயணிக்கிறாய்.!.


நான் தன்னந்தனியாய்
பயணிக்கையில், நீ மட்டும்
பலகோடி முகங்களோடு !
நான் எங்கே நிற்கிறேனோ
அங்கே நீயும் நின்றுகொள்கிறாய் !


எனது தவறுகள்
எனது செயல்கள்
எனது அறியாமை என
அனைத்தையும் நீ
பதிவு செய்கிறாய்..


நான் உனை
பாற்கும்போதெல்லாம்
எனைப்பார்த்து நீ
சிரிக்கிறாய்..


உனது பயணத்தில் ஒரு
அலட்சியமில்லாத
இலட்சியம் தெரிகிறது-அது
என்னவென்று என்னால்
புரிய முடியவில்லை...


என்னை நீ ஏன் தொடர்கிறாய்
என என்னை நானே
கேட்டுக்கொள்கிறேன்...


பரந்து விரிந்த அந்த
இருண்ட வான்வெளியை
இரவினூடே நான் ரசிக்கையில்
நீ என் முகம் மறைக்கிறாய்..


சில நேரங்களில் நீ
வெறிக்கிறாயா சிரிக்கிறாயா
என்னால் அறிய முடியவில்லை...




அந்த ஒற்றையடி
ஒருவழிப்பாதையில்
பெரும்பகுதி கடந்துவிட்டேன்
நான் களைத்துப்போயினேன்-நீயோ
ஆரம்பத்தில் இருந்த அதே
உற்சாகத்தோடு...


இரவு நிறம் மாறி
விடியலெனும் புதிய நிறமாய்,
இப்போது கடலின்
கரை தொட்டு நிற்கிறேன்-அந்த
ஒற்றையடி
ஒருவழிப்பாதையின் முடிவில்- உன்னை
திடீரென தொலைத்த
அதே இடத்தில்..


நிலவே
இப்போது நான்
ஒரு புதிய வழிப்பாதையில்
அலட்சியமில்லாத இலட்சியமுள்ள
ஒரு புதிய பயணத்திற்காய்
உன்னைத்தேடி....

Oct 11, 2010

ஒரு கவிதையில் துவங்குவோமே....




விடை பெறுகிறேன்....


அள்ளி வீசப்படும்
வாக்குறுதிகளைப்போல் இருந்தது
அன்றைய பகல் எனக்கு
முற்றிலும் பொய்யாக....

காலையில் என்னை
கடந்து சென்ற அதிவேகப்
பேருந்தின் முன் இருக்கைப் பெண்
கை அசைத்துச்சென்றாள்
பரிச்சயமான முகம்தான் என்றாலும்
இதுவரை யாரெனப்புரியவில்லை....

வீட்டுப்படிகளில்
ஓடோடி வந்து என்னை
அழைத்துச்சென்று
மதிய உணவைக்கூட ஒரு
விருந்தாய் பரிமாறினாள் அம்மா...

எப்போதும் என்னை
புகழ்ந்து பேசும் எதிர் வீட்டு
மாமி முதல் முறையாய்
என்னைப்பார்த்து சிரிக்க
மறுத்தாள்.......

வழக்கத்திற்கு மாறாக
என் தங்கை என்னைப்பார்த்து
அழத் துவங்கியிருந்தாள்....

சொந்தங்கள் சிலரெல்லாம்
என் வீடு தேடி வந்து செல்வதுமாய்
களேபரமாகிக்கொண்டிருந்தது...

கை நிறைய பணத்துடன்
என் தாய் மாமன் என் வீட்டு
திண்ணையில்
ஒரு முன்னறிவிப்புமில்லாமல்
தேடிக்கிடைக்காத ஏதோ ஒன்று
இலவசமாய் கிடைத்தார்போல்...

ஒரு புரியாத புதிருக்கு
விடை சொல்வதைப்போல்
நான் சிரித்துக்கொண்டேன்....

நான் கேலி செய்யப்படுவதாய்
உணர்ந்தேன்- எதுவும் கேட்டு
அறிய முடியாதவனாய்
விழி பிதுங்கி ஒதுங்கி நின்றேன்....

பக்கத்து வீட்டு சின்னப்பையன்
முதல் முறையாய் என் பக்கத்தில்
பயமில்லாமல் வந்தான்-
புன்சிரித்து என் கைகளில்
முத்தமிட்டுச் சென்றான்....

அதிசயித்து நின்றேன்
ஒரு கணம்- சூடம் ஏற்றி
தட்டோடு வந்தாள் அம்மா
மாலை இருட்டும் முன்
வீட்டுக்குள் வா மகனே என்றாள்....

சில வருடங்களுக்குப் பின்
முதன் முறையாய் என் தாய்
சனியனையும், தறுதலையையும்
மறந்திருந்தாள்...

என் கண்களை நானே
முத்தமிடத்துடித்தேன்
எல்லோரும் என்னை அன்று
மௌன விரதமாக்கினர்...

ஒரு முறை ஒரேமுறை
எனக்கு என்ன விஷேஷம்
என அறியத் துடித்தேன்- அவனுக்காய்
காத்திருந்தேன்...

என் மொழிக்கு காத்திராமல்
அவன் மறுமொழியோடு வந்தான்
நண்பா நளை நீ
துபாய் பயணப்படவேண்டும்
என்றான்.

எனது கேள்விகளை
புதைத்துக்கொண்டு
இதயத்தை உரமேற்ற
தயாறானேன்...

புதிய அன்பு
புதிய பாசம்
புதிய நேசம்
புதிய அழுகை
என எல்லா
பொய்களுக்கும் என்
மௌனத்தை மட்டும்
நிஜமாக்கிவிட்டு

அந்த பனி படர்ந்த
மறு நாள் அதிகாலை
பயணமானேன்-

என் இன்பம்,
என் துன்பம்,
என் கோபம்,
என் கனவுகள் என
எல்லாம் அறிந்தும்

வெறும் நிஜமான
அன்பை மௌனமாய் சொல்லும்
என் வீட்டு நாய்க்குட்டிக்கு மட்டும்
வாய் திறந்து பயணம் சொல்லி
நான் பயணமாகிறேன்.....

அபூ ஃபஹத்