Jan 10, 2012

காதல்....

துளித் துளியாய் பிறந்தது
காதல் என்னில் – அதன் ஆரம்பம்
என் அருகே அடிக்கடி கடந்துசெல்லும்
வேறு சிலரில் நிகழ்வுகளாய்..

தொலைபேசிகளில் துவங்கி
அலைபேசியில் பரிணமித்து
இணையதளத்தில் கருத்தாடி
ஏதோ ஒரு குறைபாடோடு
நின்றிருந்தது என் காதல்....

இடைவெளிகளுடன் துவங்கிய
நேர்முக உரையாடல்கள் பின்
இடைகளை தொட்டு நின்றது - எமது
நெருக்கம் பற்றி சொல்ல
அடைமொழிகள் இல்லாது.....

காதல் மட்டும் காரணமாய் நாங்கள்
நடந்து முடித்த பாதைகளில்
விலாசங்கள் இல்லை – வெறுமனே
பாதச்சுவடுகள் வானம் பார்த்திருந்தன...

நான் நாட்களை அதிகம்
கரைக்கவே இல்லை – காதலை
முன்பின் தெரியாமல் துவங்கியதால்
அனுபவக்காதல் வேண்டாம் என
காதல் அனுபவம் கொள்கிறேன்......

ரசித்தவைகள், பிடித்தவைகள்
என பலதும் நேர்த்தியாக
கோர்த்தெடுக்க முடியவில்லை – எனினும்
எம் பார்வையில் சிதறிக்கிடந்தவை
புதிய பல அர்த்தங்கள்
பிறப்பித்திருந்தன...


படித்தறிவதற்கு நான் அறிந்த நீ
கதையுமல்ல இதிகாச ஏடுமல்ல – கவிதையாய்
நீ பிறந்துவிட்டாதல் என்
கண்களால் மட்டும் மேய்கிறேன்....

புதிய மாற்றங்களை
எதிர் நோக்குபவன் நான் – எனினும்
நான் பழைய மரபுகளை
மறந்துவிடுவதே இல்லை
காதலும் அப்படித்தானே....

கலைக்காத கர்ப்பமாய்
தீண்டப்படாத குமரியாய்
மறக்காத இதயமாய்
உலராத முத்தங்களாய்
என் காதலும் கரையை
கடக்கும் சில கடற்கரைகளையும்....

என்னையும் காதலையும் தவிர
நீ மட்டும் ஏதோ கரை கடந்த்தால்
இப்போதெல்லாம் புதிதாய் விதைப்பதே
இல்லை நான் – சில வார்த்தைகளை
விதறிச்செல்கிறேன் வழியோரம்
விமர்சனங்களாய்...

அன்புடன்
அபூ ஃபஹத்..