Nov 25, 2014

ஒரு நாள் வரும்......

ஒரு நாள் வரும்.....
*****************************
இன்னும் பெய்திறங்குகிறது
பெரும் மழை - நேற்றுவரையிலான
கடும் வெயிலில் காய்ந்து நிற்கும்
ஒலைச்சருகுகளினூடே
பெய்திறங்குகிறது மழை...
.
சாய்த்திறக்கிய மேற்கூரையில்
ஆங்காங்கே சொருகப்பட்ட
கமுகின் பாளைகளினூடே
வெளிப்பட்டிருக்கவேண்டும்
ஏழ்மையின் ஓட்டைகள்...
.

நிமிர்ந்து பார்த்து கருமேகத்தை
கோபித்துக்கொள்கிறேன் - நீர்த்துளிகள்
வீழ்வதும் வரையறைக்குள்
நிற்காத என் அறைகளுக்குள்..
.
கீச்சிடும் சப்தங்களினூடே
சில மூஞ்சூறுகளின்
மழைக்கோபம் என்மீதான
பரிவின் ஏக்கமாயிருக்கக்கூடும்.....
.
நீண்டு சுருங்கும் புழுக்கள்
எப்போதோ என் பாதங்களை
நக்கி வெளிப்படுத்திய மகிழ்ச்சியில்
சகதியில் வெந்து சுருங்கிய
சருமங்களில் நீற்றல்கள்....
.
எடுத்து வைத்த நேற்றைய
பழஞ்சோற்றில் சற்றே
முன்பு விழுந்திருக்கக்கூடும்
வாரியினின்றும் வழைந்து
நெழிந்த மழை அட்டை...
.
கைக விரல்களின் நடுக்கம்
ஒருபோதும் என் கால்களின்
பலத்தை பாதித்ததேயில்லை
நம்பிக்கையையும்தான்....
.
மறுகால்பாயும் ஓடைகளில்
இன்னும் என் முகம்
தெழிவாய் தெரிகிறது - யாரும்
மாய்த்துவிடவியலா ஏழ்மையின்
சபிக்கப்பட்ட முகம்...
.
ஒரு நாள் வரும்..
அருட்கொடைகளால்
நான் அகமகிழ்வேன்
காத்திருப்பின் அவஸ்த்தையை
அழகிய மேகங்களால்
மூடும் ஒரு நாள் வரும்.....
.
.அபூ ஃபஹத்