Jan 14, 2014

ஒரு மாடப்புறாவின் மரணம்...


ஒரு மாடப்புறாவின் மரணம்......
****************************


சற்றுமுன் இறக்க
துவங்கியிருக்கக்கூடும் - ஏதோ 
வாகனம் அடித்திருக்கவேண்டும்
நான் நாங்கள் அவர்கள்
நீங்கள் என எல்லோரும் பார்த்திருக்க
தலை குனிந்து வீழத்துவங்கியது....


சாலையில் கடந்து சென்ற
வாகனத்தின் இரைச்சல்
மரணத்தின் நேரத்தில்கூட
பயத்தை தந்திருக்கக்கூடும்
இன்னும் சில நாளிகையில்
மரணிப்பதறியாத அந்த நிமிடங்களில்....

மனிதர்களின் பாதச்சுடவடுகள்
பயத்தின் உச்சம் – கால்கள்
நடக்காதபோது தன் அலகால்
ஊர்ந்து இடம் மாறும்போதும்
எட்டநின்று பார்த்த கண்களில்
அதிசயித்தலின் அவா....

மரணத்தின் கடைசி ரேகைகளை
சாலையின் குறுக்கே தானே
வரைந்து தீர்த்தது அந்த மாடப்புறா
பின்னோக்கிச்சென்ற கால்களை
தாங்கிநிற்கத்துடிக்கும் பலமிழந்த சிறகுகள்
கர்வமில்லை நெஞ்சுரமில்லை
தன்னைத்தானே மீட்க முனையும்
மாபெரும் முயற்சி.....

மரணத்தின் நேரத்தை காத்திருக்கும்
கரும்பூனை ஒரு பக்கம் – மரணிக்கும்
மாடப்புறாவை கண்டு
ரசிக்கும் வக்கிர மனிதரின்
கொலைக்கண்கள் மறுபக்கம்....

கண்கள் இருண்டிருக்கவேண்டும்
இமைகள் மூடி அரைத்தூக்கத்தில்
இருக்கும் சிறுவனின் கண்கள்போல்
அழகாயின மாடப்புறாவின் மரணம்....



சிறகுகள் சிலிர்த்தது
மயில் தோகையாய் விரிந்தது
இமைகள் திறந்து சுற்றும் பார்த்து
தரையில் தன் அலகால் கொத்தி
மரணத்தில் வீழ்ந்தது மாடப்புறா...

கண்கள் பனித்து கண்ணீர்
துளிற்கும் தருணம் – இதோ
மரணம் மறந்த மடையர் கூட்டம்
வளைந்து நெழிந்து தாழ்த்தி உயர்த்தி
தன் கேமிராக்கண்களோடு
சிரித்து கை கொட்டி மகிழ்ந்து தீர்த்தது....
மானிடம் அங்கே
கழுகுக்கண்களாய் எட்ட நின்ற
பூனையை தோற்கடித்தது...


மரணம் மகத்தானது...
உண்ர்ந்து கொள்ளாத
மனிதம் இருட்டானது.....

அபூ ஃபஹத்

Jan 4, 2014




நீ சொன்ன அதே
நிறுத்தத்தில்தான் இறங்கினேன்
அங்கே நீ இல்லை - உன்னை
தேடி வந்தது தெரிந்து
வெறுமனே சிலர் வேடிக்கை
பார்ப்பதுபோல் தெரிந்தது....


சிறிது தூரத்தில் வேறு
ஒரு பேருந்து வருவதைக்கண்டு
நான் அங்கேயே
நின்றுகொண்டேன் - ஒருவேளை
நீ நிற்பதாய் சொன்ன
அதே இடத்தில் என்னை
தேடலாமல்லவா.....

இன்னும் சிலர் என்னையே
வெறித்துப்பார்ப்பதுபோல்
உணர்கிறேன் - அந்த பேருந்தில்
நீ இல்லாமல் போனதை
நான் வெறுப்பாய்
பார்த்துக்கொண்டிருந்தேனே....

யாரோ ஒருவருக்காய்
எப்போதோ தேடி நின்றதை
இப்போதும் நினைத்துப்பார்க்க
இயல்கிறது இன்னும்
மாய்ந்து போகாத அதே
பேருந்து நிறுத்தத்தில்
யாருக்காகவோ எதற்காகவோ
காத்து நிற்கும்போதும்
மனதை விட்டு விலகாத
அதே வெறித்த முகங்களும்
வெறுமையின் எனது பார்வையும்.......

      ........





உனது தோள்களை
பலப்படுத்து - உனது
கால்களை ஸ்திரப்படுத்து
உனது கைகளை
எந்நேரமும் அகலமாய் வை
உனது மனதை விஷாலமாக்கு

வயோதிகத்தின் கழைப்பில்
ஏழ்மையின் இயலாமையில்
நோயின் வலியில்
எந்நேரமும் உன்னைத்தேடி
யாரும் வரலாம்

உனக்கு பிடித்தமானவர்கள்
உனது உறவினர்கள்
உனது நண்பர்கள்
நானும் வரலாம்

உன்னைப்பிடிக்காதவரும்
உனக்குப்பிடிக்காதவரும்கூட
வருவதற்கான சாத்தியம் உண்டு

இவை அனைத்தும் உன்
வாழ்நாளில் எப்போதும்
நிகழாமலும் போகலாம்
எனினும் நீ மனதை
விஷாலமாக்கு ...


உன்
இதயத்தை பாவத்திற்கு
விற்றுவிடாமல்
பரிதவிப்பிற்காக கொஞ்சம்
வைத்துக்கொள்......


பெரிதாக ஒன்றும்
சொல்வதற்கில்லை
என் சினேகிதியே...

புது வருடம் பிறந்திருக்கிறது இன்று,

கழிந்த வருடம் இதே போன்றொரு தருணம்தான் உன்னை நான் வாழ்த்த மறந்தேன். இரண்டு தினங்கள் கழிந்து உன் அலைபேசியிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தாய், அந்த எண்ணில் பல முறை தொடர்பு கொண்டேன், விபரம் இல்லை, மீண்டும் மீண்டும் மிஸ்டு கால்.... நான் களைத்துப்போயினேன்....

பரிதாபப்பட்டாயோ என்னவோ, ஒரு நாள் முழுக்க தொல்லையான நட்பை மீண்டும் தொலைக்க விரும்பாமல் அலைபேசியை எடுத்து ஹலோ என்றாய்...

வழக்கமாக எல்லோரும் சொல்லும் அந்த மிருகத்தின் பெயரை எந்த தயக்கமுமின்றி வாரி இறைத்தாய்...

என்ன செய்வது நட்பின் முன்னால் மகிழவேண்டியிருந்தது, வாழ்த்து சொல்லாததற்காக இவ்வளவு கோபம் காட்டுகிறாய் என்று தெரியாமல் போனது...

சகட்டு மேனிக்கு அலப்பரை செய்து புது வருடம் முதல்நாள் முதல் கடைசி நாள் வரை புதுப்புது பெயர் போட்டு கொண்டாடித்தீர்த்தபோது வராத வெறுப்பா இப்போது வந்துவிடப்போகிறது...

கால ஓட்டத்தில் நிறைய மாற்றங்கள், புது வருடத்தின் பிறப்பு இப்போதெல்லாம் டாஸ்மாக்கிலும், இரவு விடுதிகளிலும் ஆனபோது இங்கே நோயினாலும், அடுத்த வேளை சோற்றுக்கும், அடுத்த வேளை மருந்துக்கும், இருக்க இடம், குளிரில் போர்த்திக்கொள்ள ஆடை, என எதுவுமில்லாத சாதி மத இன மொழிகள் தாண்டிய ஒரு சமூகம் தெருவிலும் முகாம்களிலும் இருந்துகொண்டிருப்பதை நினைத்தால் புது வருடம் என்ற ஒன்று சாதாரணமாக இருந்துவிட்டது...

உனக்கு மட்டுமல்ல, எனது அன்புச்சினேகிதர்களுக்கும் நான் இதுவரை வாழ்த்து சொல்லவில்லை....


நான் ஏதோ பெரிய கதையோ, சட்டங்களோ, விலக்குகளோ, அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்றெல்லாம் பார்த்து வெறுமனே இருக்கவில்லை...

மனதுக்குள் உனக்காக நான் பிரார்த்தித்துள்ளேன்....

நீ முடிந்தால் நம்மை தெரிந்த நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லும்போது அவர்கள் கொண்டாட்டங்களை ஏதேனும் ஏழையின் வீட்டில் சென்று அவர்களோடு இருந்து அவர்களின் வாழ்க்கையை ஒரு தினம் முழுக்க அனுபவித்து அவர்களுக்காக ஏதேனும் நற்சேவை செய்து திரும்பி வரச்சொல்...

குறைந்த பட்ஷம் மதுவுக்காக செலவிடும் பணத்தையாவது இவ்வழியே செலவிடச்சொல்...நீயும் சேர்ந்து செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்....


இறையருளால் மாதம் யாராவது ஒருவருக்காவது நானும் எனது நண்பர்களும் எங்களால் இயன்ற ஏதேனும் உதவி செய்துவிடுகிறோம்...




மன்னித்துவிடு.....

நீயும் நமது நண்பர்களும் எங்கே இருந்தாலும் உனது இந்த நாளுக்காகவும் எல்லா நாட்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன்....

நட்போடும் வாஞ்சையோடும்..

அபூ ஃபஹத்