Mar 16, 2014

சுயமிழந்த சிங்கம்....


சுயமிழந்த சிங்கம்....
**************************


அண்மையில்தான் அது
அசிங்கப்பட்டிருக்கக்கூடும் - சுயமிழந்த
சிங்கத்தின் முகத்தில் 
சினம் கழைந்த நகக்கீறல்கள்.....

சிரம் தாழ்ந்து தொங்கும் தாடையில்
இன்னும் ரோமங்களின் சிலிர்ப்பு
குறையவில்லையெனினும்
தன் முகம் சிராய்த்த
நகக்கண்களில் வீழ்கிறது
கண்ணீர் பிழைகள்.......

அடக்கவியலா அச்சம்
விழிகளில் கொப்பளிக்க செய்வதறியாது
தனித்து நிற்கிறது சிங்கம்
சுற்றும் அட்டைக்கத்திகளின்
கூர் முனைகளோடு இன்னும்
எருதுக்கூட்டங்கள்.....

சற்றே தூரத்தில் தெரியும்
தடாகத்தில் நீர் அருந்தவேண்டும்
சூரியக்கதிர்களில் வெந்து
வெளியேறுவதாய் தோன்றும்
தடாகத்தில் நீரில்லை
ஆமாம் கானல் தடாகம்....

வாலின் நீளம் வாயின் அகலம்
பற்களின் கூர்மை நகங்களின் பலம்
கால்களின் வேகம் என
தன் பலமறியாமல் பலனிழந்த
சிங்கம் இன்னும் ஆயத்தமாவதை
மறந்து நிழல் தேடுறது....

அட்டைகத்திகள் இன்னும்
நிமர்ந்து நிற்கிறது - காற்று
வேகமெடுக்காதவரை
அட்டைக்கத்திகள் வீரமிடும்
முழங்கும் ஜொலிக்கும்...

சலசலக்கும் சருகுகள்கூட
பயப்படுத்தும் - நரம்புகள்
புடைக்க நெற்றி வியற்க
பிரம்மை கொள்ளும்.....

சற்றும் சுணங்காது
எடுத்து வைக்கும் முன்னங்கால்கள்
பெருங்கூட்டத்தையும்
பின்வாங்கச்செய்யும்
எதிர்த்து நிற்கும்ஆயுதங்கள்
அடங்கிப்போகும்.....

சூழ்சிகளால்
வீழ்த்தப்படுகிறது வீரம்
வீரம் விழுந்தால்
வெற்றியும் வீழும்.....

உள்ளீடற்ற உருவம் கண்டு
பயந்து நடுங்கும்போது
நான் இரவில் இருக்கிறேன்
என்பதை மறந்துபோகிறேன்...

உள்ளீடற்றது உருவமா
அல்லது இரவின்
நிலா வெளிச்சத்தில்
வீழ்ந்த எதோ ஒன்றின்
நிழலா...

இவை இரண்டுமாயிருக்கலாம்
இல்லாமலும் இருக்கலாம்

பயம் மட்டும் நிஜத்தில்
என்னோடு பயணிக்கிறது.....