காலம் சென்றவர்கள்......
தெக்கூட்டு பெருவெட்டர்
பெரிய சண்டிதான் - அண்ணக்கெல்லாம்
அவர் நடந்தாலே அந்த
தெருவெல்லாம் நடுங்கும்....
பெரிய மீசை சாவன்னாவின்
பெயர் சொன்னா பெத்த
கொழந்தையும் பதறும் - அவர்
பாசத்துக்கு முன்னால பயம்
எல்லாமே பறந்து போயிரும்...
ஆலடி காக்கா மரிச்சி
ஒம்பது வருஷமாச்சி - அவரு
இடுப்புல எப்பவும் வச்சிருந்த
கத்தியை இப்ப பாத்தாலும் பேடிதான்....
ஆறு கட்டை பேட்டரி லைட்டு
ஐமக்கண்ணு உப்பா - ஓங்கினா
எவனும் கிட்ட நிக்கமாட்டான்
தெறிச்சிருவானுவோ....
எந்த சண்டை வந்தாலும்
ஒத்த ஆளா போகும் பெல்ட்
செய்தும்மு காக்கா - ஒருத்தருக்கும்
அடங்காது பேரப்புள்ளைய தவிர....
ஒரு லோடுல மூணு சாக்கு அரி
வச்சி சவட்டும் - பெரிய
கேரியலு உள்ள சைக்கிளு
அய்யாளு போனதோட அதுமாரி
சைக்கிளும் இல்லாம போச்சி.....
இருவத்தஞ்சி மைலுண்ணாலும்
ஒரு எத்துல நடந்து போகும் மரிச்சிப்போன
அவ்வக்கரு உப்பா - எல்லா
சந்தைலயும் அவரு பெரிய ஆளுதான்
இப்பெல்லாம் யாரு நடக்குறா....
இப்படி அடையாளங்களை
அடை மொழிகளாய் தந்தது
காலம் சென்றவர்களின்
காலடிச்சுவடுகள்....
நேற்றும் யாரோ இறந்ததாய்
தகவல் வந்தது - மிகவும்
பரிச்சயமானவராம் எனக்கு
எனினும் அவரை அறிந்துகொள்வதற்கு
அடையாங்கள் போதவில்லை....
கைகளில் கத்தியோடும்
கர்ஜிக்கும் குரலோடும் நிறையபேர்
நம்மைச்சுற்றிய பகுதிகளில் - ஆயினும்
சொல்லிக்கொளும்படியாய் அவர்களிடம்
எதுவுமில்லையோ என தோன்றுகிறது...
மிடுக்கு நடையும் மிரட்டும் மீசைகளும்
நேரிய தாடியும் நிறையவே தைரியமும்
காலம் சென்றவர்களில்
அடையாளங்களாகிப்போனது
அவர்களே அறிந்திராமல்
அழகாய் ஒட்டிக்கொண்டவை....
யாரும் மறந்திடாதபடி
நூற்றாண்டின் அடையாளங்கள்
தலைமுறைகளாய் பரிமாறப்படுவது
வெறுமனே அல்ல - சில
விலைமதிப்பற்ற அடையாளங்களாய்
உறவுகள் அறியப்படுவதற்காய்......
அபூ ஃபஹத்