
துப்புரவு
*************
ஒவ்வொரு வாரமும்
நான் துப்பரவு செய்கிறேன்
என் மடிக்கணணியை - என்
செல்ல மகளுக்கும் ஆசை மகனுக்கும்
அன்பு மனைவிக்கும் பரிமாறிய
எனது வீடியோ முத்தங்களின்
எச்சில்களை.....
அபூ ஃபஹத்
நிதர்சனங்கள்...
------------------------
வாழ்க்கையின் வழிதேடி
நான் வழைகுடாவில்
தொலைத்ததென்னவோ வருடங்களை
மட்டுமல்ல - கூடவே
வாழ்க்கையையும்தான்......
விளையாடித்தீர்த்ததால் வீணாகிப்போனது
வேலைதேடும் வயது – நான்
வேறு வழிகளின்றி
விழி பிதுங்கி நிற்கிறேன்....
விண் முட்டும் விலைவாசி
என்றாள் மனைவி – கண
நேரத்தில் என் விரல்
தொட்டு நின்றது வியர்வைத்துளிகள்.....
அவளின் அடுப்படியில்
அலறும் என் அலைபேசி
அழைப்புகள் – யாரும்
கேட்பாரற்றுப்போகும்
என் பரிதவிப்புகள்.....
ஒலிவந்த திசை நோக்கி
அவளின் கோபத்தின் உச்சம் - சில
சில்லறை வார்த்தைகளோடு
"" ம் சொல்லுங்க
நேரம் கெட்ட நேரத்துல"".....
ஊர் வருவதாய் சொன்னபோது
அவளுக்க மகிழ்ச்சிதான்
எனினும் வருவதெப்போதென்று
அறிவதற்குள் அவள் பால் மாவு
கேட்கிறாள் - கூடவே
டைடும், சோப்பும்,
பேஸ்ட்டும் பாலாடைச்சட்டியும்....
சலாம் சொல்ல மறந்த மகன்
வாங்கிக்கேட்டது சோனி
பிளே ஸ்டேஷன் – கூடவே புதிய
சாம்சங் ஐ.பேடும்....
எலக்ட்ராணிக் கைத்தடியாம்
சும்மா மடங்கி விரியணுமாம் – பளிச்சென
பிரைட் லைட்டும்
சிலோண் பெல்ட்டும்
எடுத்த எடுப்பில் உப்பா கேட்டார்.....
வாசலின் இல்லாமல்
வாசல் மிதிக்கவேண்டாம் – கொஞ்சம்
வாசனையுள்ள பிரில் கிரீமும்
மச்சான் அடம் பிடித்தார்....
மாமாவுக்கு குடையும் வேணும்
பாங்கோசை கேட்காத
காதுகளை குடைந்தெடுக்க
ஜாண்சன்ஸ் பட்ஸும் வேணுமாம்....
பாவம் மாமி வேறென்ன
கேட்டுவிடப்போகிறாள் – "சந்தோஷமாய்
வந்து சேருங்கள் போதும்"
மறந்துவிடவேண்டாம்
சான்யோ அடுப்பு மட்டும்.........
இந்தியன் மணி கொண்டுவா
ரெண்டு காறுக்கும் வாடகை
தரவேண்டும் – டிரைவரும்
தன் பங்கை சொன்னான்....
கடைசியாய் என்
இரண்டு வயது மகள் சொன்னாள்
""நீ வா வாப்பா சீக்கிரம்"" முழுமை
பெறாத வார்த்தைகள் செல்லமாய்
மூன்று முத்தங்களோடு...
வயதான என் வாப்பும்மாவும்தான்
ஆபத்தெடங்கேறில்லாமல்
“நீ வா வாப்பா சீக்கிரம்"" - முழுமை
பெறாத வார்த்தைகள் செல்லமாய்
மூன்று முத்தங்களோடு.......
வாழவே வெறுத்துப்போகும்
பல நேரங்களில் மனதை
நனைப்பது குழந்தைகள்மட்டுமல்ல -
குழந்தையாய் மாறிப்போன
வயோதிகரும்தான்...
பேசி முடித்தபோது என் காதுகளில்
ஒர் ஒற்றை மணிச்சத்தம் – கண்
இமைக்கும் நேரத்தில்
காத தூரத்தில் என் அலைபேசி
சைக்கிளில் பயணித்தது
களவாணிப்பயலின் கைகளில்....
கைகளில் குப்பூஸ் கட்டும்
2 ரியால் தயிர் புட்டியும் - அடுத்த
வேளை உணவை முடிக்க
விடுமுறை பற்றி
ஒரு முடிவுக்கு வராதவனாய்....
அன்புடன்
ஆபூ ஃபஹத்
சாயா கொண்டாம்மா
எனத்துவங்கும் நம் வீட்டு
விடிகாலைகள் - சில
மறுக்கமுடியாத இருமல்
சத்தங்களோடு....!!
கிழவிக்கு ராத்திரி
ஒறக்கமே கிடையாதோ - புதிதாய்
நேற்று மணமாகி வந்த
பேத்தியின் பொருமல்...!!
நேரம் வெளுக்கறதுக்குள்ளே
வெத்தலை தட்டணுமா - இடி சத்தம்
காதுகளை துளைத்த கோபத்தில்
தூக்கம் கலைந்த மகன்...!!
எங்கயோ தண்ணி பாயிற சத்தம்
கேக்குது பைப்பை பூட்டும்மா - இந்த
வயசிலயும் காதுக்கு
ஒரு குழப்பமும் இல்லை,
வேலைக்காறியின் முணுமுணுப்பு...!!.
தேங்காயை வெட்டி
லைன்ல போட்டுராம பாருப்பா,
கறண்டு போனா பெரும்பாடு – வீட்டின்
உள்ளே இருந்தாலும் நம்மள
வாழ விடாது வயசம்மா,
தென்னை ஏறுபவனின் கரகரப்பு...!!.
அம்மா பசிக்குது
ஏதாச்சும் குடுங்கம்மா - நேத்துதானே
இவ வந்தாள் வேற மாறி கேக்கச்சொல்லு,
கெழம் மண்டையைப்போடாதோ
பிச்சைக்காரியும் பிறுபிறுத்தாள்....!!
சில பட்டியலிட முடியாத
நமது விடுதல்கள் – வயதானபோதும்
வாப்பும்மாக்களின் நினைவு படுத்தலில்
நாம் ஒத்துக்கொள்ள மறுக்கும்
அன்றாட தவறுகள்.....!!
கட்டவிழ்த்து விடப்பட்டதுபோல் இன்றைய
இளைய தலைமுறைகள் – இன்றும்
கிளடுகள் இல்லாத வீடுகள்
சில தறிகெட்டோடும் காளைகளைப்போல்....!!.
ஒவ்வொரு முறை கோபப்படும்போதும்
நாம் மறுத்துப்போவது அவர்களின்
அனுபவங்களை மட்டுமல்ல
எழிதில் தேடிக்கிடைக்காத வாழ்க்கை
தத்துவங்களையும்தான்....!!
வயதான வாப்பும்மாக்களை வீட்டுக்குள்ளேயே
நாம் தொலைத்திருக்கிறோம் – யாரும்
கேட்பாரற்று இருட்டறைகளில்
அனாதையாய் அடைபட்டுப்போன
பழைய பொக்கிஷங்களைப்போல்....!!
நிபந்தனைகளற்ற நிதர்சனங்களாய்
இன்றும் தலைமுறைகள் தாண்டி
வாப்பும்மாவின் வார்த்தைகள் சில
வாழ்க்கைக்குறிப்புகளாய்...!!.
சந்தன நிற குப்பாயமும்
வெள்ளைக்கவுணியும் நீலச்சாரமும்
இடுப்பில் வெள்ளி அறிஞாணமுமாய்
மீண்டும் வாப்பும்மாக்கள் புதிய தலைமுறைக்கு
வாழ்க்கை சொல்லட்டும்..............!!!!!
அன்புடன்
அபூ ஃபஹத்
மனைவி......
***********************
அன்பே என அழைத்தால்
ஆசையாய் புன்சிரிப்பாள் – சில
நேரங்களில் ஆத்திரமும் கொள்வாள்....
கண்ணே என்றால் காரிகை
அவள் கண் சிமிட்டி
முறைத்துக்கொள்வாள் – ஏதோ
சொல்லி முணுமுணுப்பாள்...
மனதில் அன்பு ஆற்பரித்தால் எனை
பெயர் சொல்லி அழைப்பாள் – ஏதும்
சினத்தில் சிக்கிக்கொண்டால்
ஊரார் பெயரெல்லாம்
சின்னாபின்னமாகும் எனினும்
என் பெயர் சொல்ல மறுப்பாள்.....
பாத்திரங்கள் அடுப்படியில் அவள்
ஆத்திரத்தால் அலறித்தெறிக்கும் – சிலதை
அனுபவித்தறியவேண்டும் அருகில்
மிக அருகில் அவள்
கோபத்தின் உச்சத்தையும்.....
துக்கை என கொஞ்சமும் திக்காமல்
திட்டித்தீர்ப்பாள் தொட்டிலில்
கீச்சிடும் குழந்தையை - நிமிடங்களில்
கண் கலங்கி வாரி அணைத்து
உச்சி முகர்வாள்.....
கூட்டிவைத்த குப்பையை
மீண்டும் மீண்டும் பெருக்குவாள் – தாறுமாறான
விளக்குமாறால் சில பல கோலம்
கெட்ட வசனங்களோடு......
எல்லோர் வீட்டு அடிப்படியிலும்
பால் கொதிக்கும் பாத்திரம் மட்டும்
ஓராயிரம் காயங்களுடன் – யாரும்
கேட்பாரற்ற அவளின்
வலிகளை ஏற்றுக்கொள்வதால்..........
நிம்மதியில்லா நித்திரையும்
நீதமில்லா கனவுகளும் – ஏன் என
தெரிந்துகொள்ளாமலே வெண்மதியாய்
துயில் எழுவாள்.....
நான் வலித்தால் அவள் துடிப்பாள்
நான் துவண்டால் அவள் தேம்புவாள்
நான் தோற்றபோதெல்லாம்
உடனிருந்து என் உணர்வுகளுக்கு
உருக்கொடுப்பாள்.....
சிந்தை மகிழ வைப்பாள்
மனைவி - வாழ்க்கையின்
அர்த்தம் புரிய வைப்பாள்.......
அன்புடன்
அபூ ஃபஹத்......