வளைகுடா ....
*************************************
1970-களுக்கு முன்னரே அன்றைய நமது இளைஞர்களில் பலரும் பல நாட்கள் கடல்வழிப்பயணப்பட்டு அரபு நாடுகளின் ஏதாவது ஒரு கடற்கரையில் இறங்கியபோது அவர்கள் மனதில் எந்தவித எதிர்பார்ப்புகளும் இருக்கவில்லை, கண்ணை கட்டி காட்டில் விட்டவர்களைப்போல் வந்திறங்கியிருக்கக்கூடும், நாம் எப்படி நடத்தப்படுவோம், எந்த மாதிரியான வேலைகள் செய்யப்போகிறோம், என்பதெல்லாம் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அன்றைய காலம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப்பார்க்கக்கூட முடியவில்லை. அன்றைய நிலையை இன்றைய நாம் ஒரு 10 நிமிடம்கூட பொறுத்துக்கொள்வோமா என்று கூட தெரியவில்லை... கடற்கரைகளை முதலும் கடைசியுமாக பார்த்தவர்களும் இருப்பார்கள், மறுமுறை ஊருக்கு செல்லும்போதுதாதான் மீண்டும் பார்க்க நேரி்டும், சிலருக்கு கடலே கதி..
பாலைவனத்தன் பளபளக்கும் மண் குவியல்களான குன்றுகளுக்கு இடையில் தபூக்கும், சிமென்டும், சுமந்து தீர்த்த தோள்கள் இன்று நம் ஊர்களில் நமக்கு அருகாமையிலேயே இருக்கலாம், ஏன் நம் வீட்டில் நமது தகப்பனாகவோ, அண்ணனாகவோ, உப்பாவாகவோ கூட இருக்கலாம். பல காலம் வளைகுடாவின் ஏதோ மூலைகளில் படாத பாடுபட்டு பல ஆண்டுகாலம் தன் இளமையையும், அழகிய வாழ்க்கையையும் பாலை மணலில் செடியாய் பதியமிட்டு அதனை தண்ணீருக்கு பதில் தம் கண்ணீரையும் உரத்திற்கு பதிலாக தம் இரத்தத்தையும் ஊற்றி வளர்த்து அதிலிருந்து கிடைத்த ஊதியத்தை தன் தாய் தந்தைக்கும் தம் குடும்பத்திற்க்கும் தந்துவிட்டு, தான் அங்கே உலர்ந்த ரொட்டித்துண்டுகளை மட்டும் உண்டு தியாகியாக வாழ்ந்து முப்பது நாற்பது ஆண்டுகளை கடந்தபின் திரும்பி ஊருக்கு வந்து ஏதாவது செய்யலாமே என ஒதுங்கும்போது கைகளிலோ ஏதுமற்று ஏமாற்றம் அடைந்தவனாக ஊரில் யாராலும் என்னவென்றுகூட கேட்க ஆளில்லாமல் அனாதையாய் இருக்கும் பலரும் நம்மிடையே இல்லாமலில்லை...
அன்றைய காலங்களில் வெளிநாட்டிற்கு வந்தவர்கள் ஏதோ நன்கு படித்து பட்டம் பெற்று பெரிய பெரிய வேலைகளுக்காக வரவில்லை, மாறாக வீட்டிற்கே வேண்டாதவனாகவும், வேலையத்து திரிபவனாகவும் முத்திரை குத்தப்பட்ட துடிப்பான இளைஞர்களாகவேோ இருந்தனர். அவர்களை அன்று தொழில் ரீதியிலோ, அல்லது வியாபார ரீதியிலான எந்த துறைநோக்கியும் செலுத்த யாருமில்லாமல் இருந்ததும் ஒரு பெரிய காரணம். ஆனாலும் சமூகம் சமுதாயம் மற்றும் உறவினர்கள் கூட வெறுத்த பல சகோதரர்களும் அன்று இப்படி ஒரு வெலிநாட்டு பயணம் பற்றிய வழியே யோசிக்கும்போது இந்த இளைஞர்களிடையே வாழ்க்கை பற்றிய பயம் மட்டும் அதிகமாகவே இருந்திருக்கிறது. அதிகமானவர்களின் வேலையும் மிகவும் சிரமமானதாகவே இருந்திருக்கவேண்டும். அதுபற்றி கேட்டறிய முற்பட்டபோது பலரின் கதைகளின் ஆரம்பமும் மனதில் ரணத்தை ஏற்படுத்துகிறது. சரியான தியாகம் என்பது என்ன என்பதை உணரமுடிகிறது.
அன்று வளைகுடாவின் கடற்கரைகளை தொட்டபோது யாரும் புர்ஜ் கலீஃபாவையோ, புர்ஜில் அரபையோ, பஹரைன் பாலத்தையோ, பிரபலமான எதையுமோ அவர்கள் காணவில்லை. கப்பலில் வந்துகொண்டிருக்கும்போது தம்மை சுற்றி தண்ணீரை மட்டுமே கண்டவர்கள் கரைகளை தொட்டபோது கண்டது மணற்காடுகள் மட்டுமே, கண் எட்டும் தூரம்வரைக்கும் சுற்றும் மணற்காடுகளாய் பாலைவனக்குன்றுகள். இன்றுபோல் கைகளில் பூச்செண்டுகளோடோ, ஆங்கிலோயர்கள் பாணியில் கோட் சூட் அணிந்தோ யாரும் வரவேற்பதற்கு இருக்கவில்லை. ஏதோ சிலர் சில அரபுக்கள் அடிமைகளை ஓட்டிச்செல்வதற்காக நின்றதுபோல்தான் இருந்தது. ஆனால் பலரும் இன்றளவுக்கு மோசமாக அடிமைகளாக நடத்தப்படவில்லை என்றே சொல்லலாம். அவர்களின் மனதில் நல்ல ஈரமும், அன்பும் இருந்திருக்கிறது. காரணம் இன்றளவும் நாம் இந்த மணற்காடுகளை விரும்புகிறோம் என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
நேற்றைய தலைமுறைகள் இந்த மணற்காடுகளை ஏறத்தாள சமவெளிகளாக மாற்றியமைக்க மிகப்பெரும் பங்காற்றியுள்ளனர். நான் ஏற்கெனவே சொன்னதுபோல் நேற்றைய நம் தலைமுறைகள் தூக்கிய தபூக் கற்களாலும், சிமென்ட் மூட்டைகளாலும் கட்டிமுடிக்கப்பட்ட வானுயர கட்டடங்களின் மாடிகளில் உல்லாசமாய் வாழ்க்கையை நடத்துகிறது இன்றைய தலைமுறை. வீட்டை விட்டு, உரவுகளை விட்டு, பல ஆயிரம் மைல்கள் கடல் கடந்து நிற்கும்போதும் பல மாதங்களுக்கு ஒரு முறை நகரத்திற்கு வந்து தொலைபேசி நிலையம் சென்று மணிக்கணக்கில் காத்துநின்று கடைசியில் லைன் கிடைத்து ஹலோ என்று கேட்கும்போது தொலைபேசியின் மறு முனையில் எதிரொலியுடன் கேட்கும் தாயின் சத்தத்தில் உணர்வுகள் அனைத்தும் உருகி கண்களில் ஆறாய் ஓடும் காட்சிகளில் அன்று நனைந்து போவர் ஊரில் இருப்பவர்கள்.
ஊரில் வசதிபடைத்த விரல் விட்டு எண்ணும் சிலரிடம் மட்டுமே அன்று தொலைபேசிகள் இருந்தன. கழிந்த மாதம் வந்த கடிதத்தில் அடுத்த மாதம் 15-ம் தியதி நான் ஃபோண் பண்ணுவேன், நீ காலைலயே வந்து ஷாகுல் காக்கா வீட்டில் இரு என்று எழுதப்பட்டிருக்க அந்த கடிதத்தை தினமும் நான்கைந்து முறையேனும் எடு்த்து பார்த்து பார்த்து வைக்கும் தாயும், மனைவியும், தந்தையும் அந்த நாளுக்காக காத்திருப்பதில் மட்டுமல்லாம் ஷாகுல் காக்காவின் வீட்டோடு தொடர்பை அதிகப்படுத்திக்கொள்வதிலிருந்து அடிக்கடி அவர்களுக்கான பல ஒத்தாசைகளும் செய்து கொடுப்பதுவரை பலவிதமான நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவதும், அந்த நாள் காலையிலேயே ஷாகுல் காக்கா வீட்டில் வந்து மகனின் ஃபோணுக்காக காத்திருக்கும் தாய்மார்களின் அவஸ்த்தை கலந்த எதிர்பார்ப்புகளையும் நாம் உணர்ந்துபார்த்தால்தான் புரியும்.
அன்றைய காலத்திலும் மிக மோசமான விமர்சனங்களும் வலிகளும் தாங்கியே இருந்துவந்தனர் வெளிநாடு பயணிப்பவர்கள். ஆனால் முதல் விடுமைறைக்கு வரும்போது அவர்களுக்கு ஊரில் இருந்த மரியாதை அன்றைய முதலமைச்சர்களுக்குக்கூட இருந்ததில்லை. மிகவும் மதிப்பும் மரியாதையும் மிகுந்தவர்களாக பார்க்கப்பட்டனர். ஒருவர் விடுமுறை முடிந்து மீண்டும் வெலிநாடு புறப்படும்போது அந்த வீடு ஏறத்தாள ஒரு இறந்தவீடு போன்றே காட்சியளிக்கும். ஏதோ சிலர் சில கடிதங்களைக்கொண்டு வந்து கொடுப்பர். தன் மகனிடம் கொடுப்பதற்கும், போஸ்ட் செய்தால் போதும் என்றும் கூறி அவர்கள் தரும் கடிதத்தை பத்திரமாக தன் கைப்பையிலேயே வைத்துக்கொள்வர். பயணப்படுபரோடு வேலை செய்பவர்கள் யாராவது இருந்தால் ஏதாவது தின் பண்டங்கள் கொண்டு கொடுப்பர். அப்படி கொடுக்கப்படும் எந்த பொருளும் கடைகளிலிருந்து வாங்கி கொடுக்கப்படுபவை அல்ல. தன் மகனுக்காக கொடுத்தனுப்ப தானே செய்து பக்கும் பார்த்து, கண் விளித்து, தன் அன்பையும், பாசத்தையும் அதில் கலந்து கொடுத்தனுப்புவாள்.
இதுபோன்ற நேரங்களில் மனைவிகளின் நிலை ஏறத்தாள மரணப்படுக்கையில் இருப்பது போன்ற உணர்வுகளையே தரும். அழுது அழுது முகமெல்லாம் வீங்கி கண்கள் சிறுத்து மானசீகமாக தளற்ந்துபோயிருப்பாள் மனைவி. இவை ஏதுவுமறியாமல் என்ன செய்வதென்றறியாமல் தேமே என முளித்துக்கொண்டு அப்படியே ஒதுங்கி நிற்கும் சிறு குழந்தைகள். விடியற்காலையில் காரில் ரயில்வே ஸ்டேஷன் வரை சென்று பம்பாய்க்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழியனுப்பிவைத்துவிட்டு வீட்டை அடைந்து அனுப்பிய விபரத்தை சொல்லிவிட்டு, எதுக்கும்மா அழுதுட்டே இருக்கீங்க, அவன் என்ன சம்பாதிக்கத்தானே போறான், சும்மா வேலையை பாருங்க என்று சொல்லும் தந்தை தன்னையுமறியாமல் கண் கலங்கி தன் கலருக்கு அடியில் இருக்கும் கைக்குட்டையை எடு்த்து கண்ணை துடைத்துவிட்டு ஏதோ யோசித்தவாறு சாய்வு நாற்காலியில் அப்படியே படுத்து மனமுடைந்து படுத்திருப்பதும் மிகவும் மனதை வலிக்க வைக்கும் காட்சிகள்.
தன் மகன் போய் சேர்ந்தாச்சா என்று செய்தி வரும்வரை கையும் ஓடாமல், காலும் ஓடாமல், எந்த வேலையும் செய்யாமல் அதே ஷாகும் காக்கா வீட்டிற்கு ஒரு நாளைக்கு 10 முறையாவது சென்று ஏதும் ஃபோண் வந்துதா என்று விசாரிக்கும் தந்தையானாலும், தாயானாலும், நான்கு நாட்கள் ஆனபின்னும் நார்மலு்ககு வராத மனைவி என அது ஒரு பெரிய ரணம் மிகுந்த கவிதையாகவே காட்சி தரும்...
காலையில் 9 மணிக்கெல்லாம் கடை திறக்க போகும் வழியில் ஷாகுல் காக்கா இவர் வீட்டில் ஏறி, காக்கா நேத்தைக்கு ராத்திரி 2 மணிக்கு ஃபோண் வந்திச்சி, பிளேன் லேட்டாம். போய் எறங்கி ஒரு நாள் ஆச்சாம் என்று சொல்ல, அழுதவாறே வாங்களேன், ஒரு சாயா குடிச்சிட்டு போங்கோ, இப்போதான் உயிர் வந்தமாதிரி இருக்குண்ணு சொல்ல, அவன் வாப்பா வந்தா நீங்க இங்க வந்து விபரம் சொன்தை சொன்னா ரொம்ப சந்தோஷப்படும் என்று சொல்வாள் அந்த தாய். இந்த நல்ல சேதியை தன் அறைக்குளே நின்று கேட்டுக்கொண்டு நிம்மதியுடன் ஒரு அழுகையோடு தம் விரத்தை முடித்துக்கொண்டு மெதுவாக வீட்டன் திண்ணையில் வந்து தலை காட்டஆரம்பிக்கும் மனைவி...
சிறுகச்சிறுக தான் சேர்த்து வைத்த பணத்தில் சிலதில் ஊர் வரும்போது எங்காவது ஐந்தோ பத்தோ சென்ட் பூமி வாங்கி இடுவதும் அதிலிருந்து வரும் தேங்காயே வருமானத்தில் ஓரளவுக்கு செலவுகள் நடந்துசெல்வதுமாக இருக்கும். முடிந்தவரை செலவுகளை சுருக்கி சேமிக்க தாயாரிடமும், தந்தையிடமும் சொல்வார் மகன்...
வளைகுடாவின் வீதிகளில் துப்புரவு தொழில் முதல் கட்டிட வேலைகள், பெட்ரோல் கிணறுகளிலும், சுத்திகரிப்பு ஆலைகளிலும், இரவு பகல் பாராது வேலைகள் செய்து பணம் சேமிப்பது மட்டுமே தமது வேலையாக இருக்கும், இரவுகள் முழுவதும் தமது வீட்டின் நினைவுகளும், மனைவி மக்களின் நினைவுகளுமாக வாழ்க்கை ஒரு வலிமிகுந்து பயணப்படும். தான் ஒரு கடிதத்தை எழுதி முடிக்க பல நாட்கள் எடுத்துக்கொள்வதுமுண்டு. பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒருவர் ஊருக்கு பயணப்படுகிறார் என்றாலும் அவர் கை வழியாக பணமோ பொருளோ, அத்தோடு ஒரு கடிதமோ கொடுத்தனுப்புவதற்காக அவரை காண செல்வதற்கு அந்த நெஞ்சம் படும் பாடிருக்கிறதே அது மிகப்பெரும் வேதனையானது. ஒரு பவுன் தங்கம் அனுப்புவதற்குக்கூட இயலாத காலம் அது. கடன் வாங்கியோ, அல்லது முதலாளியிடம் அட்வான்ஸ் வாங்கியோ மகளுக்காக ஒரு பவுன் தங்கம் வாங்கி அனுப்புவதும் அதனை கொண்டுசெல்பவருக்கு எந்த தடங்கலும் வராமலிருக்க அதனை மறைப்பதற்கான வழிமுறைகள் செய்வதும், அந்த சகோதரனின் வீட்டு்குக சென்று பெட்டிகள் கட்டி வீட்டில் சென்று தன் நிலைமைகள் பற்றி எடுத்துக்கூறி வாப்பாவிடமும், உம்மாவிடமும், பணத்தை தவராக செலவு செய்யாமல் வலியறிந்து செலவு செய்ய கேட்டுக்கொள்வதும், பயணம் அனுப்பிவைப்பதுவரை கூடவே சென்று அனுப்பிவிட்டு கண்ணீரோடு தன் அறைக்கு திரும்புவதும், இனி நாம் எப்போது ஊருக்கு பயணப்படுவோம் என்ற எண்ணங்களோடு இருப்பதும் அன்றைய வலிகள்...
காலம் செல்லச்செல்ல கடிதங்களின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்தது. வேகத்திற்கு ஏற்றார்போல் தேவைகளும் அதிகரித்தது...
தொடரும்....
No comments:
Post a Comment
படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...