Jul 5, 2013

அன்புள்ள அம்மாவுக்கு......

அன்புள்ள அம்மாவுக்கு...
**************************


அம்மா.! நீ நலமாய் இருப்பாய்
என்று எனக்குத்தெரியும் - நானும்
நலமாய் இருப்பதாய்
நினைக்கிறேன்....

நகரத்து மாப்பிள்ளை
வேண்டாம் என்றேன் - நீ
நகரம்தான் அழகு என்றாய்
ஆமாம்.. அவரைத்தவிர
எல்லாம் நரகமாய் இருக்கிறது....

பக்கத்து வீட்டு ஆச்சியும்
முன்வீட்டு மாமியும்
அக்காவும் குழந்தைகளும்
அப்பாவும் நல்லா இருப்பாங்க...
உங்களுக்கென்ன
ஊர்லயே இருக்கீங்க....

நான் ஆறாவது மாடியில்
ஏழாவது ஃபிளாட்டில் இருக்கிறேன்
அக்கம் பக்கம் யார் யாரோ
இருக்கிறார்கள் - ஆனால்
யாரும் யாரையும் இதுவரை
தெரிந்துகொள்ளவே இல்லை...

நாம் வீட்டை திறந்தே
வைத்திருப்போம் - இங்கே
வீட்டிற்குள்ளேயே பூட்டிவிட்டுத்தான்
இருக்கவேண்டும்....

கட்டிடங்களுக்கும்
வாகனங்களுக்கும் இடையில்
தினமும் நெருங்கிச்சாகிறோம்
நானும் இந்த நகரமும் - ஆமா
புகையும் அழுக்கும்
வெறுப்பை ஏற்படுத்துகிறது...
....

நம் வீட்டு வேப்பமரம் ரொம்ப
பெருசா வளர்ந்திருக்காம்
தங்கச்சி சொன்னாள் ஊஞ்சல்
கட்டி ஆடுவதாய் - இங்கே
மணி பிளான்ட்டுக்கு மட்டும்
என் கணவர் தண்ணீர் ஊற்றுகிறார்....

புளி கொண்டு வரும்
பாட்டி வந்தா எனக்காய்
கை குத்து புளி வாங்கி வை - பாட்டியையும்
அவங்க மகளையும் நான்
ரொம்ப விசாரிச்சதாக சொல்...

நீ எப்பவும் அழகாதான்மா
இருக்கிறாய் - நான்
இப்பவே நகரத்து
வெப்பத்தில் வெந்து
வயசாகிப்போய் இருக்கிறேன்....


அண்ணன் வந்தப்ப
எள் உருண்டை கொண்டு தந்தான்
நீ சோறு ஊட்டி தந்ததுபோன்று
சுவைத்து சாப்பிட்டேன்
ஏதேதோ இழந்ததுபோல்
அவ்வப்போது அழுகை வருகிறது....


நேத்து லிஃப்ட் வேலை செய்யல
அவரு ஆஃபீஸ் போய்ட்டாரு
புள்ளைங்க ஸ்கூல் போய்ட்டாங்க
நூத்தி இருபது படி
ஏறி எறங்கி காலெல்லாம் வலிக்குது....


ரொம்ப பொறுமையானவள்ணு
ஊர்ல சொல்லுவாங்க - ஆனால்
இங்கே எதுக்கெடுத்தாலும்
டக்குணு கோபம் வருது
காய்கறியிலயிருந்து
காயலாங்கடை வரை ஏமாத்தறாங்க...

பெருநாளுக்கும் திருநாளுக்கும்
நம்ம வீடு நிறைய
செந்தக்காரங்களால
கல கலண்ணு இருக்கும் - இங்கே
சாப்பாடு முடிந்து
தூக்கத்திலோ கடற்கரையிலோ
முடிந்துபோகிறது.....

மெட்டி ஒலியோ
முந்தானை முடிச்சோ
டி.வி. யில ஓடலைண்ணா
யாருமில்லாத தனிமை
திகிலாகவே இருக்கும்....

அம்மா நீ கொஞ்சநாள்
என்னோட வந்து உட்காரும்மா
சில நாட்களாவது
நான் ஊரில் இருந்ததாய்
எண்ணிக்கொள்வேன்....

 ஆமாம்மா...
நீ சில நாட்கள்
இந்த நரகத்தில் எனக்கு
சுவர்க்கத்தை தந்து செல்....

__

அபூ ஃபஹத்




No comments:

Post a Comment

படித்துவிட்டு சில வார்த்தைகளை இங்கே தூவிச்செல்லுங்கள்...